ஆய்வு > ஆய்வாளர்கள் > திரு. சீ. இராமச்சந்திரன்
திரு. சீ. இராமச்சந்திரன்
சென்னை மயிலாப்பூரில் கால்நடை மருத்துவர் இரா. ஸ்ரீநிவாசன் அவர்களுக்கும் சீதாலட்சுமி(பாபுக்குட்டி) அம்மையாருக்கும் 1953 ஆம் ஆண்டில் திரு. சீ. இராமச்சந்திரன் மகனாகப் பிறந்தார்.

சீ. இராமச்சந்திரன்
சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்று தமிழில் முதுகலைப் பட்டமும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறைக்கல்வெட்டுப் பயிற்சி நிறுவனத்தில் கல்வெட்டியல் தொல்லியல் முதுகலைப் பட்டயச் சான்றிதழும் பெற்றவர். 1978 முதல் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் தரங்கம்பாடி, தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம், குற்றாலம், கொற்கை ஆகிய அகழ்வைப்பகங்களின் காப்பாட்சியராகப் பணிபுரிந்தார். லகனோ தேசியப் பண்பாட்டுச் செல்வங்கள் பாதுகாப்பு ஆய்வுக் கூடத்தில் புத்தறிவுப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு அருங்காட்சியக அரும் பொருள்கள் பாதுகாப்பில் பயிற்சியும் பெற்றுள்ளார்.
தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அகழ்வைப்பகத்தில் காப்பாட்சியராகப் பணிபுரிந்தபோது நூற்றுக்கும் மேற்பட்ட டேனிஷ் தமிழ் ஆவணங்கள், நூறு வகையான டேனிஷ்-தமிழ்க் காசுகள், கடலில் மூழ்கிய டேனிஷ் கப்பலின் நங்கூரம் முதலிய அரும் பொருள்களை அகழ்வைப்பகத்திற்காகச் சேகரித்தவர். ஐரோப்பியர் கால ஆவணங்களை ஆய்வுக்குக் கையாள்வதில் தேர்ச்சி பெற்றவர். தஞ்சை மராட்டியர் அரண்மனை அகழ்வைப்பக அமைப்புப் பணியிலும் அரும்பொருள் சேகரிப்புப் பணியிலும் முனைப்புடன் ஈடுபட்டவர். தஞ்சை மராட்டியர் கலைப் பாணியிலமைந்த ஓவியங்கள், கும்பகோணத்திலிருந்த சங்கராச்சாரியார் சாட்சிக் கையொப்பமிட்ட டபீர் பண்டிதர் குடும்ப ஓலைச் சுவடிகள், முதலிய அரும்பொருள்களை அரசுக்காகச் சேகரித்தவர். தூத்துக்குடி மாவட்டம் கொற்கையில் அகழ்வைப்பகக் காப்பாட்சியராகப் பணியாற்றியபோது ஐம்பதுக்கும் மேற்பட்ட பெருங்கற்படைக்காலப் பண்பாட்டு இடங்களைக் கண்டறிந்தவர்.
இந்தியக் கல்வெட்டியல் கழகம், இடப் பெயராய்வுக்கழகம், தென்னிந்திய நாணயவியல் கழகம் ஆகியவற்றின் வாழ்நாள் உறுப்பினர். வரலாற்று ஆய்வாளர் திரு. நெல்லை நெடுமாறனுடன் இணைந்தும் தனியாகவும் ஆய்வு மேற்கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் கண்டுபிடித்து வாசித்து ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். தொல்லியல் துறை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் முதலிய ஆய்வு நிறுவனங்களின் ஆய்விதழ்களில் இவருடைய பல கட்டுரைகள் வெளிவந்துள்ளன. அவர் சென்னையில் SISHRI (South Indian Social History Research Institute) என்ற தனியார் ஆராய்ச்சி நிறுவனத்தையும் நிறுவினார்.