கட்டுரைகள் > வெளியிடப்பட்ட ஆய்வுகள் > மறைந்த நிலையிலிருந்து வெளிச்சத்திற்கு: சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பண்டைய ஆவணங்கள் மூலம் நாடார் சமூகத்தின் வரலாற்றை மறுகட்டமைத்தல்.

மறைந்த நிலையிலிருந்து வெளிச்சத்திற்கு: சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பண்டைய ஆவணங்கள் மூலம் நாடார் சமூகத்தின் வரலாற்றை மறுகட்டமைத்தல்.

வெளியிடப்பட்ட ஆய்வுகள்

சிறப்புக் கட்டுரை

04/14/2025

முன்னுரை

கடந்த மூன்று தசாப்தங்களாக, பண்டைய நாடார்களின் வரலாறு தொடர்பான பல்வேறு பனை ஓலைச் சுவடிகள், செப்புத் தகடுகள் மற்றும் கல்வெட்டுகளை தமிழ் கல்வெட்டுவியலாளர்கள் கண்டுபிடித்து வருகின்றனர். இந்த கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவத்தை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டது இக் கட்டுரை. இந்தக் கட்டுரை திரு. எஸ். டி. நெல்லை நெடுமாறன், திரு. சீ. இராமச்சந்திரன் மற்றும் முனைவர் ஆ. தசரதன் ஆகியோரின் ஆய்வுப் பங்களிப்பை அடிப்படையாகக் கொண்டது.

Image of ancient nadar documents

பண்டைய நாடார் வரலாற்று ஆவணங்கள்

சான்றோர்களின் தோற்றப் புராணக் கதை

தோற்றப் புராணக் கதைகள் ஒவ்வொரு சமூகங்களுக்குத் தனித்தன்மை வாய்ந்தவை. அவை ஒரு சமூகத்தின் புராண தோற்றத்தை விவரிக்கின்றன. ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பண்டைய வரலாற்றைப் படிக்கும்போது, ஆய்வாளர்கள் பெரும்பாலும் அச் சமூகத்தின் தோற்றக் கதையை அதிக நுண்ணறிவுகளைப் பெற ஆராய்கின்றனர். பண்டைய நாடார் வரலாற்று ஆவணங்களால் வழங்கப்பட்ட தகவல்களை நன்கு புரிந்துகொள்ள, நாடார்களின் மூதாதையர்களான சான்றோர்களின் புராண தோற்றக் கதையை அறிந்திருப்பது முக்கியம்.

பண்டைய கதைப் பாடல்களிலிருந்து சான்றோர்களின் தோற்றக் கதை ஒவ்வொரு பதிப்பிலும் சிறிது வேறுபட்டாலும், அதன் முக்கிய கருப்பொருள் ஏழு வான கன்னிப்பெண்களைப் பற்றிச் சொல்கிறது. இக்கன்னிகள் ஒரு சுனையில் குளிக்கும்போது, வித்யாதர முனிவரால் கண்ணில் பட்டார்கள். தமது சித்து வேலையால் குளிரையும் மழையையும் மேல் காற்றையும் உருவாக்குகிறார் வித்யாதர முனிவர். நீராடிக் கரையேறிய கன்னியர் குளிர் காய நெருப்பைத் தேடுகின்றனர். வித்யாதர முனிவர் நெருப்பு வடிவில் கன்னியரைப் புணர்கிறார். கன்னியரைப் புணர்ந்தவர் ரிஷியாதலால் உடனே கன்னியர் கருத்தரித்து ஏழு பிள்ளைகளைப் பெறுகின்றனர். பெற்ற குழந்தைகளைத் தங்கள் உலகாகிய கீழுலகிற்கு எடுத்துச் சென்றால் பழியேற்படும் என்று கூறி, அக்குழந்தைகளை வித்யாதர ரிஷி வசமே ஒப்படைத்து விட்டுச் சென்று விடுகின்றனர்.

போர் தெய்வமான பத்ரகாளி அம்மன், அந்தக் குழந்தைகள் மீது இரக்கம் கொண்டு, அவர்களைத் தனது சொந்த மகன்களாக வளர்த்தார். பத்ரகாளி தனது வளர்ப்பு மகன்களுக்கு போர்க் கலையைக் கற்றுக் கொடுத்தார். இந்த ஏழு மகன்களும் அரச குல வலங்கை சான்றோர்களின் மூதாதையர்கள் என்பதை கதை மேலும் வெளிப்படுத்துகிறது. கதையின் சில பதிப்புகளில், வலங்கை சான்றோர்கள் சோழ வம்சத்தைச் சேர்ந்தவர்கள்.

ஒரு நாள், சோழ நாட்டுக்கு அருகே காவேரி ஆற்றில் உடைப்பு ஏற்பட்டது. நகரம் வெள்ளத்தால் அச்சுறுத்தப்பட்டதால், மன்னன் அனைத்து காளியின் மகன்களையும் தங்கள் தலையில் கூடைகளில் மண் சுமந்து கட்டை கட்ட உத்தரவிட்டார். வலங்கை சான்றோர்கள் அரசனுக்குக் கீழ்ப்படிய மறுத்தனர். "நாங்கள் தலையில் கிரீடங்களைச் சுமக்க வேண்டும், மண் கூடைகள் அல்ல," என்று சான்றோர்கள் கூறினார்கள். மன்னன் கோபமடைந்து, சான்றோர் வீரர்களில் ஒருவனை, அவனது கழுத்துவரை மணலில் புதைத்து, அவனது தலையை யானை உதைக்கும்படி கட்டளையிட்டான். கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, துண்டிக்கப்பட்ட தலை, வெள்ள நீரில் போடப்பட்டது. "நான் கூடையைத் தொட மாட்டேன், "என்று துண்டிக்கப்பட்ட தலை கத்தியது. கோபத்தில், இரண்டாவது சான்றோர் வீரறையும் அவ்வாறே நடத்த வேண்டும் என்று அரசன் கட்டளையிட்டான். இரண்டாவது மிதக்கும் தலை கத்தியது,"இந்தத் தலை முதல் தலையிலிருந்து வேறுபட்டதா?" பத்ரகாளியின் கோபத்திற்கு பயந்து, மீதமுள்ள சான்றோர்களை மன்னர் விடுவித்தார்.

1950களில், அமெரிக்க மானுடவியலாளரான ராபர்ட் ஹார்ட்கிரேவ், நாடார்களின் புராண வாய்மொழி தோற்றக் கதைகளைப் பதிவு செய்தார். ஹார்ட்கிரேவ் பதிவு செய்த புராண தோற்றக் கதையில் வாய்மொழி கதைகளுக்கு இருக்கும் பொதுவான சில சிறிய முரண்பாடுகள் இருந்தாலும், அது சான்றோர்களின் புராண தோற்றக் கதையை ஒத்திருக்கிறது. இரண்டு கதைகளுக்கும் இடையிலான இந்த பொருத்தம், சான்றோர்கள் நாடார்களின் மூதாதையர்கள் என்பதைக் குறிக்கிறது. இன்று வரை கூடையை தொடமாட்டார்கள் என்கிறார்கள் நாடார்கள்.

கருமாபுரம் சான்றோர் செப்புத் தகடு

Image of Karumapuram copperplate document

17ஆம் நூற்றாண்டு கருமாபுரம் செப்புப் பட்டய ஆவணம்

கொங்குப் பகுதியில் சான்றோர் செப்புத் தகடு கல்வெட்டுகளை முதன் முதலில் கண்டுபிடித்தவர் தொல்லியல் ஆய்வாளர் முனைவர் செ.ராசு ஆவார். கொங்கு மண்டலத்தைச் சுற்றி வேறு சான்றோர் செப்புத் தகடுகள் இருந்தாலும், கருமாபுரம் செப்புத் தகடு தான் மிக முக்கியமான கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது. கருமாபுரம் செப்புத் தகடு ஆவணம் 17 ஆம் நூற்றாண்டில் (400 ஆண்டுகளுக்கு முன்பு) பொறிக்கப்பட்டது மற்றும் தற்போது கருமாபுரத்தில் உள்ள ஒரு இந்து மடத்தின் வசம் உள்ளது. இந்த மடம் பல தலைமுறைகளாக கொங்கு நாடார்கள் மற்றும் பிராமணர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. செப்புத் தகடு ஆவணம் சான்றோர் சமூகத்தின் பெருமையைப் பற்றி பேசுகிறது. இந்த செப்புத் தகடு ஆவணத்தால் வழங்கப்படும் முக்கிய வரலாற்றுத் தகவல்கள் பின்வருமாறு:

  1. சான்றோர்கள் காளியால் வளர்க்கப்பட்டவர்கள் என்றும் அவர்கள் சப்த கன்னியர்களின் மகன்கள் என்பதில் பெருமை கொள்வதாகவும் செப்புத் தகடு கூறுகிறது. இந்த தகவல்கள் இன்றைய நாடார்களின் தோற்றப் புராணக் கதையிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் மூலம் சான்றோர்களும் நாடார்களும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது நிரூபணமாகிறது.
  2. செப்புத் தகடு சான்றோர்கள் ஒரு ஆளும் அரசக்குலம் என்றும் அவர்கள் சிங்கச் சின்னக் கொடியைப் பயன்படுத்துவார்கள் என்றும் கூறுகிறது. இந்தத் தகவல் மற்ற சான்றோர் செப்புத் தகடுகளாலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், பிற சான்றோர் செப்புத் தகடு ஆவணங்கள் சான்றோர்கள் புலி மற்றும் மீன் போன்ற பிற சின்னங்களையும் பயன்படுத்தியதாகக் கூறுகின்றன.
  3. சேர நாட்டில் மூப்பர் என்ற பட்டத்தையும், சோழ நாட்டில் கண்டப் (கவுண்ட்) என்ற பட்டத்தையும், வட இந்தியாவில் நாயக்கர் என்ற பட்டத்தையும், பாண்டிய நாட்டில் நாடாள்வர் (நாடாள்வார் என்ற சொல் படிப்படியாக நாடார் ஆனது) என்ற பட்டத்தையும் சான்றோர்கள் பயன்படுத்தியதாக செப்புத்தகடு கூறுகிறது. இத்தகவலை அவல்ப்பூந்துறை சான்றோர் செப்புத் தகடும் குறிப்பிடுகிறது.
  4. சான்றோர்கள் பூவேந்திய சோழன் என்ற பட்டப்பெயரால் அறியப்பட்டதாக செப்புத்தகடு ஆவணம் கூறுகிறது. வலங்கை மாலை என்ற 17 ஆம் நூற்றாண்டின் சான்றோர் வரலாற்று வில்லுப் பாடலின் படி பண்டைய நாடார் உட்பிரிவான வலங்கை உய்யகொண்டார்களின் இராணுவ வெற்றிக்காக பூவேந்திய சோழன் என்ற பட்டம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. வலங்கை உய்யகொண்டார்கள் சோழர்களின் படைவீரர்கள் மற்றும் சோழர் அரச குடும்பத்தின் உறவினர்கள். வலங்கை மாலையில் உய்யகொண்டார்களைப் பற்றிய நுணுக்கமான விவரங்களும் உள்ளன.
  5. சான்றோர்கள் ஏனாதி வழித்தோன்றல்கள் என்று செப்புத் தகடு கூறுகிறது. மேலும் 63 சைவ நாயன்மார்களில் ஒருவரான ஏனாதி நாதர் சான்றோர் குலத்தைச் சேர்ந்தவர் என்பதை செப்புத் தகடு உறுதிப்படுத்துகிறது. ஏனாதி நாதர் என்பவர் ஈழச் சான்றார் என்ற பண்டைய சான்றோர் உட்பிரிவைச் சேர்ந்தவர். இவரின் பாரம்பரிய தொழில் போர்க்கலை கற்பிப்பதாகும்.
  6. செப்புத் தகடு சான்றோர்களுக்கு அவர்களின் சொந்த நாணயம் இருப்பதாகக் கூறுகிறது. இந்த நாணயம் பின்னர் சாணார் காசு என்று அறியப்பட்டது.
  7. செப்புத் தகடு சான்றோர்கள் ஏரி வரி மற்றும் சுங்க வரி செலுத்த வேண்டியதில்லை என்று கூறுகிறது. அவர்கள் ஒரு நில உடைமை சாதியினர் என்பதற்கு இது அறிகுறியாகும்.
  8. செப்புத் தகடு சான்றோர்கள் மண் கூடைகளைத் தூக்க தங்கள் முடிசூடும் தலையைப் பயன்படுத்துவதில்லை என்று கூறுகிறது. இந்த தகவல் நாடார்களின் பூர்வீகப் புராணக் கதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சான்றோரும் நாடார்களும் ஒரே இனம் என்பதை இது மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
  9. அந்தணரான (அல்லது பிராமணரான) ஆதி சங்கராச்சாரியருக்கு சான்றோர்கள் உபதேசம் செய்தவர்கள் என்பதும் அவருக்குப் போர்க்கலையைக் கற்றுக் கொடுத்தவர்கள் என்றும் செப்புத் தகடு கூறுகிறது.
  10. செப்புத் தகடு ஆசிரியர் சான்றோர்களை சாணக் குலம் என்றும், சான்றோர் குலத்தைச் சேர்ந்த ஒருவரை சாணக் குல தீரன் என்றும் விவரிக்கிறார். சாண என்பது சாணார் என்ற சொல்லின் பெயரடை வடிவமாகும். எனவே சான்றோர்கள் தான் சாணார்கள் (நாடார்கள்) என்பதை தெளிவாக விவரிக்கும் நேரடி ஆதாரம் இது [தகவல் 2]. ஏனெனில் இச் செப்புத் தகடு ஆவணத்தில் சாண என்ற சொல் சான்றோர்களைக் குறிக்கும் ஒரு அடைமொழியாகப் பயன்படுத்தப்படுகிறது.

கருமாபுரம் செப்புத்தகடில் பொறிக்கப்பட்ட வாசகம் அடங்கிய பக்கங்களைய படிக்க கீழே உள்ள குறிப்புப் பக்கங்களைப் படிக்க என்ற இணைப்பைப் பின்தொடரவும். கருமாபுரம் செப்புத்தகடு 17 ஆம் நூற்றாண்டு தமிழில் எழுதப்பட்டது.

செப்புத் தகடு ஆசிரியர் சான்றோர்களை சாணக் குலம் என்றும், சான்றோர் குலத்தைச் சேர்ந்த ஒருவரை சாணக் குல தீரன் என்றும் விவரிக்கிறார். சாண என்பது சாணார் என்ற சொல்லின் பெயரடை வடிவமாகும். எனவே சான்றோர்கள் தான் சாணார்கள் (நாடார்கள்) என்பதை தெளிவாக விவரிக்கும் நேரடி ஆதாரம் இது. ஏனெனில் இச் செப்புத் தகடு ஆவணத்தில் சாண என்ற சொல் சான்றோர்களைக் குறிக்கும் ஒரு அடைமொழியாகப் பயன்படுத்தப்படுகிறது.

17ஆம் நூற்றாண்டு அவல்பூந்துறை செப்புத் தகடு ஆவணம்

அவல்பூந்துறை செப்புத் தகடு சான்றோர் வரலாற்றுடன் தொடர்புடைய மற்றொரு முக்கியமான ஆவணமாகும். இந்த செப்பு தகடு 17 ஆம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்டு, தற்போது ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையில் உள்ள சான்றோர் இந்து மடாலயத்தில் பாதுகாக்கப்படுகிறது. இந்த மடம் பல தலைமுறைகளாக கொங்கு நாடார்கள் மற்றும் சிவ பிராமணர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. 400 ஆண்டுகள் பழமையான இந்த செப்புத் தகடு, சான்றோர்கள் ஆதித்த (அல்லது சூர்யா) மற்றும் சந்திரா குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறுகிறது. இந்த சான்று சான்றோர்களும் மற்றும் மூவேந்தர்களும் ஒரே வம்சாவளியைப் சேர்த்தவர்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறது [தகவல் 3]. மேலும், சான்றோர்கள் வெள்ளைக் குடையைப் பயன்படுத்தும் மரபைப் பின்பற்றினர் என்று செப்புத் தகடு குறிப்பிடுகிறது. இது ஒரு காலத்தில் பண்டைய தமிழ் அரச குலத்தின் வழக்கம் ஆகும். இந்தத் தகவல் 17 ஆம் நூற்றாண்டின் கருமாபுரம் செப்புத் தகடு ஆவணம் உட்பட பல்வேறு சான்றோர் வரலாற்று ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவல்பூந்துறை செப்புத் தகடு ஆவணம் சான்றோர்கள் ஆதித்த (அல்லது சூர்யா) மற்றும் சந்திரா குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறுகிறது. இந்த சான்று சான்றோர்களும் மற்றும் மூவேந்தர்களும் ஒரே வம்சாவளியைப் சேர்த்தவர்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறது. மேலும், சான்றோர்கள் வெள்ளைக் குடையைப் பயன்படுத்தும் மரபைப் பின்பற்றினர் என்று செப்புத் தகடு குறிப்பிடுகிறது. இது ஒரு காலத்தில் பண்டைய தமிழ் அரச குலத்தின் வழக்கம் ஆகும்.

இந்த கண்டுபிடிப்புகள் ஏன் குறிப்பிடத்தக்கவை

பண்டைய இந்தியர்கள், ஐரோப்பியர்கள் போல், இந்தியாவின் அனைத்து வரலாற்றையும் உள்ளடக்கிய புத்தகங்களைக் கொண்டிருக்கவில்லை. எனவே பண்டைய இந்தியர்கள் தங்கள் நாட்டின் பழைய வரலாற்றை அறிந்திருக்கவில்லை. ஆரம்பகால ஆங்கிலேய குடியேறிகள் இந்தியாவின் பண்டைய வரலாற்றைப் படிப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தனர். ஆங்கிலேயர்கள் பல்வேறு கல்வெட்டுகள், ஓலைச் சுவடுகள், மறைக்கப்பட்ட செப்புத் தகடுகள் மற்றும் இழந்த புதையல்களைப் புரிந்துகொண்டு இந்தியாவின் வரலாற்றைப் படிக்க வேண்டியிருந்தது. சுருக்கமாக, ஆங்கிலேயர்கள் இந்தியாவின் பழைய வரலாற்றை எளிதில் படிக்கவில்லை. 1872 இல் இந்தியாவின் கல்வியறிவு விகிதம் சுமார் 3 சதவீதமாக இருந்தது. அதாவது, 1872ல் இந்தியாவில் வெறும் 3 சதவீதத்தினரே எழுத படிக்க முடிந்தது.

16 ஆம் நூற்றாண்டின் நாடார்கள் எழுத்தறிவு பெற்றவர்கள் மட்டுமல்ல, தங்கள் வரலாற்றை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பதையும் அறிந்திருந்தனர். 16 ஆம் நூற்றாண்டின் நாடார்களுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் பற்றிய விவரங்கள் தெரிந்திருக்கிறது. வலங்கை மாலை (வில்லுப்பாட்டு) பண்டைய உய்யகொண்டார்களைப் பற்றிய நுணுக்கமான விவரங்களைக் கொண்டுள்ளது. தமிழ் தொல்லியல் ஆய்வாளர்கள் உய்யகொண்டார்களைப் பற்றிய கல்வெட்டுகளை சமீபத்தில் தான் கண்டுபிடித்தனர். தொல்லியல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்ட உய்யகொண்டார்களைப் பற்றியக் கல்வெட்டு விவரங்கள் வலங்கை மாலை வழங்கிய விவரங்களுடன் ஒத்துப்போகின்றன. 16 ஆம் நூற்றாண்டின் நாடார்கள் பாரம்பரியமாக தங்கள் வரலாற்றைப் பேணி வந்த ஒரு மேம்பட்ட சமூகம் என்பதை இது தெளிவாக நிரூபிக்கிறது.

சில பண்டைய நாடார் வரலாற்று ஆவணங்கள்

  1. வலங்கை மாலை (16 ஆம் நூற்றாண்டு பனை ஓலைச் சுவடி).
  2. வலங்கை மாலை (17 ஆம் நூற்றாண்டு வில்லுப்பாட்டு).
  3. வெங்கலராசன் கதை (17ஆம் நூற்றாண்டு வில்லுப்பாட்டு).
  4. ஆதிபூர்வீக மண்டலம் காட்டு ராசாவாகிய மூலப்புலிக்கொடியோன் பூர்வீக வரலாறு (பனை ஓலைச் சுவடி).
  5. ஆதி பூர்வ மண்டங்குடி நாட்டு மன்னன் மண்டக்கென்றதிரி லோசனன் வரலாறு (பனை ஓலைச் சுவடி).
  6. கருமாபுரம சான்றோர் செப்பேடு (17ஆம் நூற்றாண்டு செப்பேடு).
  7. அவல்ப்பூந்துறை சான்றோர் செப்பேடு (17ஆம் நூற்றாண்டு செப்பேடு).
  8. திருமுருகன் பூண்டி சான்றோர் செப்பேடு (1670 இல் பொறிக்கப்பட்டது. 17ஆம் நூற்றாண்டு செப்பேடு).
  9. பெருந்துறை சான்றோர் செப்பேடு.
  10. திங்களூர் சான்றோர் செப்பேடு.
  11. திருவிடைமருதூர் சான்றோர் செப்பேடு (17ஆம் நூற்றாண்டு செப்பேடு).

முடிவுரை

முடிவில், கடந்த மூன்று தசாப்தங்களாக பனை ஓலைச் சுவடிகள், செப்புத் தகடு ஆவணங்கள் மற்றும் கல்வெட்டுகளின் கண்டுபிடிப்புகள் பண்டைய நாடார் சமூகம் அல்லது சான்றோர்கள் பற்றிய நமது புரிதலை மேம்படுத்தியுள்ளன. இந்த வரலாற்று பதிவுகள் நாடார் சமூகத்தின் தோற்றம், அரச பரம்பரை, இராணுவ மரபுகள் மற்றும் சமூக-அரசியல் முக்கியத்துவம் பற்றிய முக்கிய நுண்ணறிவுகளை வழங்குகின்றன. இந்த ஆவணங்கள் பண்டைய நாடார்களின் மேம்பட்ட கல்வியறிவையும், அவர்களின் வரலாற்றைப் பாதுகாக்கும் திறனையும் நிரூபிக்கின்றன. புராணக் கதைகளை வரலாற்று ஆதாரங்களுடன் இணைப்பதன் மூலம், இந்த கண்டுபிடிப்புகள் நாடார் சமூகத்தின் வரலாற்று அடையாளத்தை மீண்டும் உறுதிப்படுத்துவது மட்டுமல்லாமல், தமிழ் கலாச்சாரம் மற்றும் வரலாற்றில் நாடார்களின் நீடித்த பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுகின்றன.

பொதுத் தகவல்கள்

  1. சான்றார், சான்றவர் மற்றும் சாணார் என்ற சொற்கள் சான்றோர் என்ற சொல்லின் மாறுபாடுகள். இது தமிழில் ஒரு பொதுவான மொழியியல் பண்பு. உதாரணமாக, கன்று என்ற வார்த்தையும் அதன் மாறுபட்ட சொல் கண்ணும் அடிப்படையில் வெவ்வேறு உச்சரிப்புகளைக் கொண்ட ஒரே வார்த்தையாகும்.
  2. இன்றைய நாடார்கள் முன்பு சாணார்கள் என்று அழைக்கப்பட்டனர்.
  3. சேரர்கள், சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் கூட்டாக மூவேந்தர்கள் என்று அழைக்கப்பட்டனர். மூவேந்தர்கள் சூரிய, சந்திர குலத்தைச் சேர்ந்தவர்கள்.

இவற்றையும் பார்க்கவும்

குறிப்புகள்

  1. சீ. இராமச்சந்திரன். வலங்கை மாலையும் சான்றோர் சமூகச் செப்பேடுகளும். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு அரசு, 2004.
  2. எஸ். டி. நெல்லை நெடுமாறன். "கொங்குநாட்டுச் சமுதாய ஆவணங்கள்." தமிழில் ஆவணங்கள், பதிப்பிதது ஆ. தசரதன், தி. மகாலட்சுமி, சூ. நிர்மலாதேவி, மற்றும் த. பூமிநாகநாதன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு அரசு, 2001, பக். 95-105.
  3. ஆ. தசாதன் மற்றும் அ. சுணேசன். "மானவீர வள நாட்டுக் கல்வெட்டுகள்." தமிழில் ஆவணங்கள், பதிப்பிதது ஆ. தசரதன், தி. மகாலட்சுமி, சூ. நிர்மலாதேவி, மற்றும் த. பூமிநாகநாதன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு அரசு, 2001, பக். 52-59.
  4. செ. ராசு. கொங்கு நாட்டுச் சமுதாய ஆவணங்கள். தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு அரசு, 1991.
  5. எஸ். டி. நெல்லை நெடுமாறன். "சாணார் காசு." தமிழர் காசு இயல், நடன காசிநாதன் தொகுத்துள்ளார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு அரசு, 1995, பக். 153-154.
  6. ஹார்டுகிரேவ், இராபர்ட். எல். தமிழக நாடார்கள். கலிபோர்னியா பல்கலைக்கழக அச்சகம், 1969.
  7. வி. நாகம் ஐயா. திருவிதாங்கூர் மாநில கையேடு. தொகுதி 2, திருவிதாங்கூர் அரசு அச்சகம், 1906.
  8. ஐயங்கார், பி. டி. ஸ்ரீனிவாச. தமிழர்களின் வரலாறு: ஆரம்ப காலத்திலிருந்து கி.பி. 600 வரை. ஆசிய கல்விச் சேவைகள் அச்சகம், 2001.
  9. ஜரீர் மசானி. "பிரிட்டன் இந்தியாவிற்கு கல்வி அளித்ததா?" ஓபன் இதழ், 5 அக்டோபர். 2017.
  10. "இந்தியாவில் எழுத்தறிவு விகிதம் 2023." உலகளாவிய புள்ளிவிவரங்கள், theglobalstatistics.com.
------